Search This Blog

Wednesday, December 25, 2013

"திருஅருட்பா வரலாறு - 3" - வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார்

தயவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
"திருஅருட்பா வரலாறு" -
சன்மார்க்க சங்கச் சாதுக்களின் வேண்டுகோளின் படி
வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு
"திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின்ஒப்புதலின் படி
திருஅருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "
 
உரை : வடலூர் . புலவர். சீனி. சட்டையப்பனார்
 
வெளியீடு :
வள்ளலார் இளைஞர் மன்றம் - கோட்டக்கரை - வடலூர்
வள்ளலார் குடில் - விருத்தாசலம். 
வள்ளலார் பெருவெளி இணையதளக் குழுவினர் - நியூ ஜெர்சி - அமெரிக்கா
 ======
 
 
(திரு ஒற்றியூர் வழிபாடு)

அவ்வயின்ஆ ருயிர்கள்முத்தி ஆரும்நெறி அறிவிப்பான்
செவ்விதின்நல் லருள்வலித்த தோதெரியேம் சிறந்துயிர்கள்
உய்வகைஉள் ளிருந்தும்ஒளித் தொற்றிநின்ற படிகாட்டத்
தெய்வஒற்றி நின்றதனைத் திருவருளால் தேற்றியதே.   (21)

உரை:

பேரின்பப் பேற்றினை உயிர்க்குலம் முறையே அடைந்திடவும், அதற்கு முன்சாதனமாகிய உண்மை முத்தியை அடையும்வழிமுறைகளைத் தெரிவித்திடவும் மற்றும் அவ்வுயிர் கூட்டங்கள் சன்மார்க்க நெறியில் பழகி மேம்பட்டு உய்ந்திடவும்பெருங்கருணை உடைய வள்ளற் பெருமான், இராமலிங்கம் என்னும் திருவுருவத்தில் ஒளிந்து(ஒற்றி ஒளிந்து) வாழ்ந்துஅருளினார்கள்.   

அதனை அவர்களின் திருஒற்றியூர் பாடல்களாலும், வழிபாட்டு நெறிமுறைகளாலும் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடிகின்றது.   











  
(திருச்சமூகத்தின் மேன்மை)

அறவாழி அந்தணனாய் அருள்பழுத்த தவக்கொழுந்தெவ்
வறமாவ தெனிற்புலவீர் சந்நிதியை அடைந்துள்ளார்
அறமாவ தெல்லாமும் ஒருங்கடையப் பெற்றாரேல்
அறமாவ தெமக்கல்லால் அடிகளுக்கென் அறஞ்சொலுமே.   (22)

உரை:

எல்லாம் வல்ல இராமலிங்கப் பெருமான் சத்திய தருமக் கடலினர், ஆருயிர்கள் எல்லாம் மோட்சமடையத் தண்ணருள்புரிபவர்கள். திருவருள் கனி கனிந்த ஜீவகாருண்யச் சீலத்தவத்தவர்கள்,

அவ்வகையான நம் பெருமானை எத்தகைய தரும நெறினை உடையவர்? என்று கேட்கிறார்கள், அந்தோ திருஅருட்பிரகாசவள்ளற் பெருமானின் திருச் சந்நிதயை அடைந்தவர்கள் அருள் அறம்யாவும் அடையப்பெறுவது வெளிப்படை அப்படி இருக்க, பின்பற்றபடும் அறநெறிப் பயங்கள் யாவும் நமக்கே அன்றி அருட்பிரகாசப் பெருமானுக்குச் சிறிதும் அன்று.   












(தமிழ் வெள்ளம் - அருட்பிரவாகம்)

ஆணவத்தி னான்மாழாந் தறிவிழந்து வெம்பிறவிப்
பூணவத்தைப் பட்டுழலும் புன்கண்அறுத் துய்விப்பான்
மாணவத்தை அருளும்மறை விரித்தமணி வாக்கதனால்
பேணவத்தைச் சொரிதமிழ்ச்செம் பிரவாகம் பெருக்குவித்தே.   (23)

உரை:

நாம் எல்லாம் ஆணவம் என்னும் மூல மலத்தினால் மயங்கி அறிவிழந்து வாழ்பவர்கள், வாட்டி வதைக்கும் பிறவிகள்பலவற்றைப் பூண்டவர்கள், அத்துடன் அலைக்கழிப்புகள் பலபட்டுத் துன்பப்படுபவர்கள்.   

அத்தகைய நமது இழிநிலையைப் போக்கி மேம்படுத்த வேண்டும் என்று இரங்கி அருளினார்கள் இராமலிங்கப் பெருமான்.   

வேதங்களை முன்பு விரித்து விளக்கியவர் வள்ளல், அத்தகைய அருள் மொழிகளால், யாவரும் பின்பற்றி உயர்ந்திட பாடல்செய்ய எண்ணினார்கள். கருணைக் கனிமொழிகள் என்னும் வான்முகில் பொழிகின்ற தூய தமிழ் வெள்ளத்தைத் திருவருட்பாடல்கள் மூலம் பெருக்கெடுத்து ஓடும்படி திருவுள்ளம் கொண்டிட்டார்கள் இராமலிங்கப் பெருமான்.   









(கருணை கலந்திடச் செய்தல்)

சிற்றடியேம் பிழைத்தொழும்பைத் திருவுள்ளங்கொண் டகந்தை
முற்றும்ஒழித் தருள்விரவ உபாசனா முறைதெரித்தங்
கற்றம்அற அறிவுருவாய் உருவெளியாய் உருவாகிக்
குற்றம்அறுத் துணர்வூட்டிச் சேணினும்மெய்க் குறிக்கொள்ள.   (24)

உரை:

சின்னஞ் சிறிது சிறு மதியாளர்கள் நாம், பிழைகள் மிகவும் மலிந்தவர்கள் நாம், அத்தகைய குறைமிகுந்த, பணிவிடை செய்யும்அடியார் கூட்டத்தை உய்வித்திட திருவுள்ளம் கொண்டிட்டார்கள் இராமலிங்கப் பெருமான்.   

தன் முனைப்பு என்னும் அகந்தையை முற்றிலும் வேருடன் ஒழித்திட முதலில் எண்ணம் கொண்டார்கள்.   பின்பு கருணைஇன்பம் கலந்திட அன்பு கூர்ந்தார்கள், அதனால் இறைவனை வழிபட்டு உய்ந்திடும் உபாசனை முறைகளைத் தெரிவிக்கச் சித்தம்கொண்டார்கள்.   

மானுடர் மரணமிலாப் பெரு வாழ்வு அடைய அன்பு கூர்ந்தார்கள்.   மெய்ஞ்ஞானமே திருமேனியாகவும் - அத்திருமேனியே அருள்வெளியாகவும் கலந்துகொள்ள இராமலிங்கர் என்னும் திருவுருவம் தாங்கி நம் போன்றவர் குற்றம் குறைகளை அறவே நீக்கிடக் கருணை பாலித்தார்கள்.   

மனித நேய நல்லுணர்வும் - உயிர் நேய வெல்லுணர்வும் பயிலும்படி பரிந்தருளினார்கள்.   அத்துடன் இனி எதிர்வரும் பிறவிகள்தோறும் இம்மை, மறுமை நிலைகளினும் கூட ஆன்மநேயம் ஒன்றே ஆருயிரை எல்லம் ஆண்டவன் ஆக்குவது என்னும்நோக்கத்தைப் பின்பற்றக் கனிவு கொண்டார்கள்.   




(தண்ணீர் விளக்கு எரித்தல்)

நல்லருளின் இயல்பெளியோம் பெறக்காட்ட நன்னீராற்
செல்லல்இருள் அறவிளக்குங் கெரிவித்துந் தீச்சனன
வல்லபிணி அறுவிக்கும் வகைகாட்டும் படியுடலில்
அல்லல்செயும் பிணிஅனைத்தும் அருண்மொழியா னேஅறுத்தும்.   (25)

உரை:

திருவருளின் இயல்பினை இன்னது என்று நாம் அறியோம்.   அத்தகைய திருவருள் பதிவு சிறிதும் இல்லாத ஏழை எளியவர்கள்நாம்.   அத்தகைய நாமும் திருவருள் பேற்றைப் பெற இயலும் என்பதை வெளிப்படுத்திக் காட்ட இராமலிங்கப் பெருமான்நினைத்திட்டார்கள்.   

அதன் அடையாளமாக நற்கருங்குழி என்னும் திருத்தலத்தில் மணியம் இல்லத்தில் - அடர்ந்த அகஇருளும் புறஇருளும் அறவேநீங்கி ஒளிரத் தண்ணீரால் திருச்சந்நிதி முன்னே சத்திய ஞான விளக்கினை எரிவித்து அருளினார்கள்.   

அத்துடனன்றிக் கொடிய பிறவிகள் என்னும் நோயினை நீக்கியருளும் பேற்றினை வெளிப்படுத்திக் காட்ட முதலில் நம் உடற்பிணிகள் யாவற்றையும், திருவருள் மொழி ஒன்றினாலேயே வேர் அறுத்துக் காண்பித்திட்டார்கள்.   









(இதுவே எமக்குப் பாக்கியம்)

"தொடுடைய செவியன்"எனுந் தொடையால்முன் னாள்எவர்க்கும்
நாடுடைய பொருள்சுட்டி நன்றுவிளக் கியதென்ன
வீடுடைய "உலகமெலாம் உதிகின்ற" எனும் தொடையால்
பீடுடைய பொருட்சுட்டிப் பேறெமக்கின் றீதென்றும்.   (26)

உரை:

முன்னாளின் "தோடுடைய செவியன்" என்னும் அருள்மொழிகளால் யாவரும் பேரின்பத்தை நாடக்கூடிய மெய்ப்பொருளினைக் காட்டி நன்றாக விளக்கி அருளினார் திருஞானசம்பந்தர்,

அவ்வாறே பேரின்பத்திற்கு ஆதாரமான "உலகமெலாம் உதிக்கின்ற" என்னும் அருட்பிரகாச மாலைப் பாடலால் அன்புடையஅடியாரைத் தேடி ஆண்டவர் எழுந்தருளுவது உறுதி, என்னும் உறுதிப் பொருளினைச் சுட்டிக் காட்டியதுடன், அதனை அடைவதேநமக்குரிய சிறந்த பாக்கியம் என்றும் அருளினார் நம் பெருமான்.   













(ஆயிரம் பெயர் உரைக்கின்றனர்)

வேதியாய் மலக்களிம்பை நீக்கிஎமைப் பொன்னக்கும்
வாதியாய் அருள்விழுங்கி மாயாவா தியனாகி
ஜோதியாய் விளையாடும் தோன்றலுக்கோர் ஆயிரம்பேர்
ஓதினார் உணர்வுடைய தொண்டரெலாம் ஒருசிலவர்.   (27)

உரை:

மண், இரும்பு, செம்பு, வெள்ளி முதலியனவற்றைப் பொன்னாக்கும், ஏம சித்தி உடையவர் நம்பெருமானார்.   அவ்வாறேஆணவம், கன்மம், மாயை என்னும் மலக்களிம்பினை உயிரினின்று நீங்கும்படி செய்து நம்மை எல்லம் பொன் உடம்பாக்கும்சித்தியினை உண்டாக்குபவர்கள் அருட்பிரகாசர், அவர்களோ (அருள் ஆற்றலினைத் தனக்கும், உலகத்திற்குமாக உட்கொண்டுவெளிப்படுத்தும்) அசுத்தமாயை, சுத்தாசுத்தமாயை, சுத்தமாயை ஆகியவற்றை நீக்கிடச் செய்யும் வல்லபம் உடையதனிப்பெருங் கருணையாளர், அவரே அருட்பெருஞ்ஜோதியராகும் அருட்பிரகாசர்,

உயிர்க்குலம் யாவும் தன்போல் விளங்கத் திருவிளையாட்டினை இயற்றும் திருவருள் நம்பியும் அவர்களே ஆவார், அத்தகையவள்ளற் பெருமானுக்கு ஆயிரக்கணக்கான திருப்பெயர்களை வழங்கி நல் உணர்வு உடையவர்கள் ஆனார்கள் தொண்டர்கள்பலருள்ளே சில பேர்.   










(திருஅருட்பிரகாச வள்ளலார்)

தனித்துரைத்த இராமலிங்கத் தனிமறைஆ தரித்துய்ந்தார்
இனித்த அருட் பிரகாச வள்ளல்என இனிதேத்தி
அனித்தமற்றார் சிலஅறவர் அந்தோஎன் போன்மறந்து
மனித்தன்எனக் கொண்டொழிந்தார் மலவாழ்வில் சிலமறவர்.   (28)

உரை:

ஈடு இணையற்று வழங்கபெறுவது "இராமலிங்கர்" என்னும் திருப்பெயராகிய தெய்வ வேதம்.   அத்தகைய 'இராமலிங்கர்' என்னும்திருப்பெயரை அன்புடன் போற்றி மேம்பட்டார்கள் அடியவர்கள், அத்தகைய அறப்பாங்கினரே அறிவு, மதி, மனம், வாய்இவையாவும் தித்திக்கச் செய்யும் "திருஅருட்பிரகாச வள்ளல்" என்னும் தெய்வப் பெயரை இனிய உணர்வுடன் மேலும் போற்றி, போற்றி மரணத்தை நீக்கிக் கொண்டார்கள்.   

ஆனால் அந்தோ! மும்மல மயக்கத்தில் சுழலுகின்ற என்போன்ற வன் நெஞ்சர்கள் மேற்கூறிய உண்மை நிலையை மறந்து"'வள்ளலார் ஒரு மனிதர் தான்" என முடிவு செய்து அழிகின்றனரே! என்னே இழிந்தபுத்தி!










(யாருக்கு உணர்த்த இயலும்)

முலைஉண்ணி மோட்டெருமைப் பாற்கடல்மீன் எனவாழும்
நிலைஉயிர்கள் தமையுடைய பூரணத்துள் நின்றும் அந்தோ
அலைவகன்றார் இலர்துன்பத் தழுங்குகிறா ரறியாமைத்
தலைஇருந்தார் இனம்என்றால் அவர்க்குணர்த்துந் தரம்அன்றே.   (29)

உரை:

உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது வள்ளற் பெருமானின் வாழ்வியல், அதனைச் சார்ந்து இயங்குபவர்கள், மாட்டின் மடியில்உள்ள பாலினை அருந்தாது, குருதியை அருந்தும் முலை உண்ணி போன்ற பாங்குடையவர்கள் ஒரு பகுதியினர், வள்ளல்இருக்கும் இடத்தில் கிடைக்கின்ற பசுமையாம், திருவருட் புல், பூண்டுகளை மேய்ந்து வயிறு நிரப்பிக்கொள்ளாமல் வேறுஇடத்தில் தெரிகின்ற பசுமையை நோக்கி நடக்கும் மேட்டு எறுமையைப் போன்றவர்கள் ஒரு பகுதியினர்,

திருஅருட்பிரகாச வள்ளலாரின் கருணை என்னும் பாற்கடலில் இருப்பதனை உணராமல் அலைகின்ற பாற்கடல் மீனைஒத்தவர்கள் ஒரு பகுதியினர், அத்தகைய பரிபூரணத் திருவருள் உடைய வள்ளற் பெருமானின் சமூகத்தில் இருந்தும் ஐயகோ!உண்மையை உணரவில்லை.   

உயிரின் அலைவுகளினின்றும் விடுபடவில்லை, அத்துடன் மீளாத் துன்பத்திலும் மூழ்கித்தவிக்கின்றார்கள், இவர்கள் எல்லாம்முதன்மையான அஞ்ஞானக் கூட்டத்தினரின் இனத்தவரே ஆவார்கள், அது பொருந்தும் என்றால் அவர்களுக்கு நல்லனவற்றைஎன் போன்றவர் உரைப்பது தகுதியில்லை.   






(நால்வரின் அற்புதங்கள் வள்ளலாரின் ஆற்புதங்களே)

என்பு அணங்காய்க் கற்றூணம் இருங்கடல்நா வாய்ஆகி
முன்புகராம் உண்டமகச் சின்னாட்பின் முருகாய்வந்
தன்புறநல் நரிப்பரியே ஆகவும்அந் தோஅறியார்
தன்பெருமைச் சலம்இன்றிச் சந்துரைப்பார் தடுப்பரிதே.   (30)

உரை:

1 திருஞானச் சம்பந்தப் பெருமானின் வாழ்வில், திருமயிலாப்பூரில் குடத்து எலும்பு பூம்பாவை என்னும் பெண் ஆயிற்று.   

2.   திருநாவுக்கரசப் பெருமானின் வாழ்வில், வங்கக் கடலில் போட்டக் கருங்கல் தூண் தெப்பமாகி மிதந்தது.   

3.   திருவாரூர் சுந்தரர் பெருமானின் வாழ்வில், அவிநாசி என்னும் ஊரில் முன்பு முதலை உண்ட பாலகன் பின் ஒரு நாளில்அழகிய இளைஞனாக வெளிப்பட நேர்ந்தது.   

4.   மணிவாசப் பெருமானின் வாழ்வில் நரிகள் யாவும் பரிகள் (குதிரைகள்) ஆகி மதுரையம் பதியைக்குக் குதிரைப்படைகளாய்ஆரோகனித்து வந்து சேர்ந்தது.   

அவ்வகை அற்புதங்கள் யாவும் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் அவ்வவ் காலங்களில் அவ்வவ் அடியார்களாகி வாழ்ந்துஅவ்வவ் அற்புதங்களைச் செய்து அருளினார்கள் என்று பெய்யாத மெய்மொழிகளைச் சொல்லுவார்கள் சில அன்பர்கள், அத்தகையோரை அப்படிச் சொல்வது கூடாது எனத் தடுத்திட இயலாது.   
 
 

No comments:

Post a Comment