Search This Blog

Monday, July 21, 2014

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது யோகி சுத்தானந்த பாரதியார் பாடிய " திருஅருட்பிரகாச வள்ளலார் மாலை"

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

யோகி சுத்தானந்த பாரதியார் பாடிய 

" திருஅருட்பிரகாச வள்ளலார் மாலை"


திருப்பொதுவில் ஞானநடம் புரிகின்ற தெய்வசிகா மணியின் சேயை
இருட்குலத்தைப் பெருக்குகின்ற மடமையிடர் மாற்றவந்த இரவிதன்னைக்
கருக்கணக்கில் லாதவனைக் காலனணு காதகனல் மேனி யானை
அருட்சமயத் தந்தையினை அன்பருக்குத் தாயானை யடைந்து வாழ்வாம்! - 1
முருகென்னும் பொருள்விளங்கு முத்திளமை யெழில்குலுங்கு முகத்தினானைத்
தருணமழை போலடியார் தாகத்தைத் தணிக்கின்ற தயைமிக்கானைக்
கருணைவிரி மனத்தானை யெவ்வுயிருந் தன்னுயிர்போற் கருதுவானை
குருமணியென் றுலகமெலாங் கும்பிடத்தக் கோனைமனங் குறித்து வாழ்வாம்! - 2
எத்தனையோ தத்துவங்கள்! அத்தனைக்கும் இசைவாகி யவற்றின் மேலாய்
ஒத்துலகில் எல்லாரும் ஒருகுலமாய் அருட்பொதுவிற் செழிப்புற்றோங்கச்
சுத்தசிவ சன்மார்க்க சங்கத்தை முறைவகுத்த சோதிதன்னை
சித்தெல்லாம் வல்லவனைத் திருஞான தேசிகனைச் சிந்தை செய்வாம்! - 3
ஊனுருவி, உயிருருவி, யுள்ளுருவிப் பாய்ந்தினப வூற்றெடுக்கும்
தேனருவி யாலிவளர் தெய்வீகத் திருவருட்பா செழித்த வூற்றை
மானவர்க்குப் புதுவழியும் புதுயுகமும் புதுவாழ்வும் வழங்கி னானை
வானரசைக் கொணர்ந்தானைத் துரியவள நாட்டரசை வழுத்தி நிற்பாம்! - 4
பித்துலகர் பிதற்றுகின்ற மதவாதச் சூதுகளைப் பிறகிட் டோட்டிச்
சுத்தான்ம வொருப்பாட்டின் உரிமைநெறி முதன்முதலிற் றுலக்கி னானைச்
செத்தாரை யெழுப்புகின்ற ஞானசஞ் சீவியினை அமர வாழ்வின்
வித்தகனைத் தமிழ்வேத மகரிஷியை விளம்பியுளம் பொங்கு வோமால்! - 5
திணைத்துணையும் பேதமின்றிச் சீவகாருண்யவழி சேர்ந்து வாழ
மனத்திருளை மாற்றியறி வானந்தத் துரியமலை வள நாடேறி
நினைத்திடவும் முடியாத நிலைக்கு நம்மை யழைத்தானை நேரிலோர் நாள்
அனைத்துலகும் அறிவானைத் தமிழரின்னும் அறியானை யணிந்து வாழ்வாம்! - 6
பலமதங்கள் ஒன்றெனவே வடக்கினிலு மேற்கினிலும் பகருமுன்பே
தல முயருந் தமிழகத்தில் அருளான்மச் சமரசத்தை நாட்டி னானை
நலமுயருங் குருமணியை நவயுகத்து நபிமணியை இன்ப மோங்கி
உலகுயருந் தவமணியை உண்மையறி வொளிமணியைப் போற்றுவோமால்! - 7
மருட்சமய வாதுகளும், மாமாலச் சடங்குகளும் மண்ணைக் கெளவ
இருட்சாதி வேற்றுமைகள் இடர் செய்யும் பிரிவினைகள் இரிந்து தேய
பொருட்செறிந்த மணிவாக்கும், பொதுநலஞ்செய் புண்ணியமும் பூண்டெழுந்த
அருட்ஜோதி ராமலிங்கப் பெருமானின் அடிமலர்கள் முடியில்வைப்பாம்! - 8
- சுவாமி சுத்தானந்த பாரதியார்.

No comments:

Post a Comment