Search This Blog

Wednesday, December 25, 2013

"திருஅருட்பா வரலாறு - 5" - வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார்

தயவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
"திருஅருட்பா வரலாறு" -
சன்மார்க்க சங்கச் சாதுக்களின் வேண்டுகோளின் படி
வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு
"திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின்ஒப்புதலின் படி
திருஅருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "
 
உரை : வடலூர் . புலவர். சீனி. சட்டையப்பனார்
 
வெளியீடு :
வள்ளலார் இளைஞர் மன்றம் - கோட்டக்கரை - வடலூர்
வள்ளலார் குடில் - விருத்தாசலம். 
வள்ளலார் பெருவெளி இணையதளக் குழுவினர் - நியூ ஜெர்சி - அமெரிக்கா
 ======
 
 
(தில்லையில் சேமித்த திருமுறைகள் போல)

திருநெறிய தமிழாதி தெய்வமுறை பன்னொன்றும்
ஒருநெறிய மனம்வைத்தார் உருகாறும் திருத்தில்லைக்
கருநெறியங் ககல்விக்கும் கடப்பாளன் கைக்குறியாய்ப்
பெருநெறியர் சேமித்து வைத்திருந்த பெற்றிஎன.   (41)

உரை:

திருநெறியத் தமிழ் தேவார, திருவாசகங்களாகும்.   அவை எட்டுத் திருமுறைகள் ஆகும்.   அவற்றை ஒருமை மனத்துடன்அன்பர்கள் ஓதி உய்ய வேண்டும் எனத் திருவருள் எண்ணிற்று.   அதன் காரணமாகத் தில்லை சிதம்பரத்தில் பிறவிப் பெருங்கடலை கடத்தக்கூடிய திருமுறைகளைத் திருவறைக்குள் வைத்துத் தம் கைச் சின்னத்தையே அடையாளமாக்கிவைக்கும்படி இறைவன் கருணை கூர்ந்தான்,

அவ்வாறு அருள் நெறியில் பழகினவர்கள் தேவார திருவாசகங்களைச் சேமித்து வைத்தது போலத் திருஅருட்பாபாடல்களையும் சமரச வேத சன்மார்க்க சங்கத்தினர் ஆங்காங்கே கண்ணும் கருத்துமாக தெய்வ சிரத்தையுடன் சேமித்துவைத்திருந்தனர்.   











(சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள்)

அமலம்அருள் திருஅருட்பா அருண்மரபு தனைக்குறித்துக்
கமைஉறுமா சேமித்து வைத்திருந்த தென்பர்கண்டீர்
எமைஉடையான் எல்லாமும் வல்லஅருட் பிரகாசன்
சமரசவே தச்சன்மார்க் கச்சங்கச் சாதுக்கள்.   (42)

உரை:

எம் தம்மை ஆளுடையார் எல்லாம் வல்ல திருவருட்பிரகாசர், அவரால் உண்டாக்கப் பட்டதே சமரச வேத சன்மார்க்க சங்கம், அச்சங்கத்தை அபிமானித்து வருகின்றவர்களே சன்மார்க்க சங்ககத்துச் சாதுக்கள்.   வினை, மதம், மாயை, மலம் ஆகியவற்றைஅகற்றி, நிறை அருள் பேற்றினை வழங்கிடும் ஆற்றல் உடையது திருஅருட்பா.   

அத்திருஅருட்பா ஆறு திருமுறைகளாகப் பிரிந்திருந்தாலும் ஒவ்வொரு திருமுறையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.  அத்துடன் அன்றி அருட்பேற்றினை முறையே வழங்கி நிறைவதற்காகத்தான் அவ்வாறு தொடர்புடையதாகியது.   அத்துடனன்றித் திருவருள் மரபு ஒழுங்கினையும் தன்னகத்தே கொண்டுள்ளது, ஆதலின் அச்சன்மார்க்க சாதுக்கள் குறைவற பரிசீலனை செய்து1, 2, 3, 4, 5, 6 திருமுறைகள் என்பதாகவே முறையுடன் வகுத்துத் தொகுத்து வைத்திருந்தார்கள் என்பதை உணர்வீர்களாக.   










(செல்வராயரின் சிறந்த பணி)

தந்திருக்கூட் டத்துள்ளான் சதுரையான் பெரியசிவா
னந்தபுர விழைவுடையான் நஞ்செல்வ ராயன்பால்
அந்தியிளம் பிறைஅணியும் அணிமுடியை மறைத்தபிரான்
சுந்தரக்கை சாத்தியவத் திருவேடு தொகுத்தன்றே.   (43)

உரை:
சமரச வேத சன்மார்க்க சங்கத்தை அபிமானித்தவர்களுள் சிறந்த ஒருவர் சிவானந்த புரம் செல்வராயர். அவர் சன்மார்க்கசங்கத்து சாதுக்களின் திருக்கூட்டதைச் சார்ந்தவர்.   அருட்திரங்களும் சூழ்ந்தவர்.   பிறை சந்திரனை அழகுறத் தரித்துக்கொண்டவர் சிவபெருமான்.   

அச்சிவ பெருமானாக மறைந்து எழுந்தருளி வந்து தம் தெய்வத் திருக்கரங்களால் திருஅருட்பாவை வரைந்தருளினார்கள், அத்தகைய தெய்வத் திருமுறை ஏடுகளைச் சிவானந்த புர வாழ்வுடைய செல்வராயர் முதலில் ஒன்று திரட்டித் தொகுக்கத்தொடங்கினார்கள்.   













(திருஅருட்பா மகிமை)

பண்ணீர்மைச் சுவைமுதிர்ந்த திருப்பனுவல் அருட்பயனைத்
தண்ணீர்என் றோருவெண்பாச் சம்பந்தப் பிரான்வழியில்
தெண்ணீர்த்தென் கூடல்வரும் சிதம்பரமா முனிதெரித்தால்
உண்ணீர்மை ஒன்றுமிலேன் உரைப்பதுஓர் புகழாமே.   (44)

உரை:

திருவருள் இசையும், திருவருள் பயனும், பேரின்பச் சுவையும் முதிர்ந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.   அவர் வழியில் வந்துதிருவருட்பா திருப்பாடல்களைப் பயிலுவதால் வரும் அருட்பயனை மதுரையம் பதியில் வாழ்ந்த மதுரை ஆதினத்து சிதம்பரமாமுனிவர் என்பவர் தெரிவித்து உள்ளார், "தண்ணீர் விளக்கெரித்த" என்னும் திருவெண்பாவால் அவ்வாறு தெரிவித்துள்ளார், இருள் நிறைந்த மனிதனிடத்தில் அருள் ஒளி நிறைந்த சிவம் ஓங்கும்படி அருள்புரிவதே திருஅருட்பா பாடல் என அவர்தெரிவித்துள்ளார்,

அவ்வாறு மதுரை ஆதினகர்த்தர் பாடிய பின்பு, தகுதிபாடு யாதும் இல்லாதவனாகிய யான் திருஅருட்பாவின் மகிமையைஎடுத்து உரைக்க முயன்றால் அதுவும் ஒரு புகழ் ஆகுமோ? ஆகாது; எனவே திருஅருட்பாவின் மகிமையை எளியேன் உரைக்கமுற்படவில்லை.   










(ஆறாவது திருமுறை)

கலிநிலைத்துறை

ஆறா வதுமுறை ஆரிய னார்தம் அருளானே
வேறோர் சார்சே முற்றன் றெம்வினை விளைபாகம்
தேறாப் பருவந் தேர்ந்தென் றிசினோர் உதுநிற்க
வீறார் மற்றை முறைவெளி வந்தமை விரிசெய்வாம்.   (45)

உரை:

திருஅருட்பா ஆறு திருமுறைகளை உடையது, அதில் "ஆறாவது திருமுறை இறைவனின் திருவருளாலே தனியாகத்தொகுக்கப் பெற்றுப் பாதுகாத்திட வேண்டும், அதனைப் பின்பு அச்சு வாகனம் ஏற்றலாம்" என்று கூறி அருளினார்கள் எம் சற்குருநாதர், அவ்வாறு கூறியது எனது தீவினையின் காலமேயாகும்.   

எமது பக்குவம் இல்லாத காலமே ஆகும், அருட்பக்குவம் நிறைகின்ற காலத்து ஆறாம் திருமுறையை வெளிப்படுத்தலாம் என்றுஎம் சற்குரு நாதர் அருளியதை மேற்கொண்டு அதுபற்றி ஏதும் விவரிக்காமல் நிறுத்திக்கொள்ளும் படி ஆயிற்று, அஃது அப்படிஇருக்க, அருள் ஆற்றல்கள் பொருந்திய மற்றை ஐந்து திருமுறைகள் வெளிப்பட்டமை குறித்து விளக்காமாகச் சொல்லத்தொடங்குகின்றோம்.   








(திருவொற்றியூரில் திருஅருட்பா ஓத்துதல்)
தரவு கொச்சகக் கலிப்பா

ஆங்கவற்றைச் சிலர்அறிந்தார் அறியாரு மாகப்பின்
ஓங்கருளான் முத்துச்சா மிப்பெயரின் ஓர் உரவன்
தீங்ககல மன்பதைக்குத் திருஒற்றிச் சிவபெருமான்
பாங்கருட்சந் நிதிமுன்னர் பகர்ந்துபத்தி வித்தின்னே.   (46)

உரை:

திருஅருட்பா ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றன, ஆறாம் திருமுறை தவிரப் பிற திருஅருட்பா பாடல்கள் ஐந்துதிருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றவற்றைச் சிலர் அறியவந்தார்கள், சிலர் அறியக்கூடவில்லை, அப்படி இருக்குத் திருவருள்கூட்டுவித்ததின் படி முத்துசாமி என்னும் நல் அறிஞர் உலக நன்மை கருதி, உலகத் துன்பங்கள் அகலுவதற்காகத் திருஒற்றியூர்தியாகராசப் பெருமான் திருவருட் சந்நிதி முன்பு முறையாகப் பத்தி சிரத்தையால் ஓதி உயர்ந்தார்கள்.   













(யார் பாடியது எனத் தேடியது)

அப்பத்தி அன்புமுளைச் சிறிதுபூத் தருள்விரவ
மெய்ப்பத்தி யில்சிலவர் விமலஅருட் பாவிழைந்து
செப்புற்றார் யாவர்எனத் தேடுறுதேட் டங்கண்டு
துப்பற்றார் சிலர்எழுதித் துரிசிற்றார் பரிசுற்றார்.   (47)

உரை:

அதன்பின்பு, திருஅருட்பாவின் மீது பக்திகொண்டவர்கள் பலர்.   அவர்கள் உள்ளத்திலோ அன்பு முளைக்கத் தொடங்கியது, அருள்பூத்து மணம் பரவத் தொடங்கியது, அதனால் உண்மை பக்தி கொண்ட சிலர் அத்திருஅருட்பாவினை ஓதி மேம்பட விருப்பம்கொண்டார்கள், திருஅருட்பாவினை யார் பாடி அருளியது? எனப் பேசத் தொடங்கினார்கள், திருஅருட்பா எங்கே கிடைக்கும்?எனத் தேடிப்பார்க்கும் ஆர்வம் கொண்டார்கள், காதில் விழுந்த அளவிற்குத் திருஅருட்பாவை எழுதினார்கள், அதுவும் குற்றம்குறையாகவும், தப்பும் தவறுமுடைய தன்மையோடும் எழுதினார்கள்.   













(திருஅருட்பா அச்சேறுதல்)

ஈதுணர்ந்தங் கென்போல்வார் சிற்சிலவர் பொருள்விழைவால்
கோதுறுவார் மரபிறந்து கோள்விராஅய்ச் சிறிதச்சில்
போதுறத்தாம் பொறித்தலும்அ பெற்றிஉணர்ந் தாங்குரைத்த
தீதில்திரு அருட்செல்வ ராயப்பேர் சேமத்தான்.   (48)

உரை:

வள்ளற் பெருமானே திருஅருட்பா பாடல்கள் பாடியருளியது என உணர்ந்தார்கள் சிலர், என்போன்ற சிலர் பொருள் ஆதாயம்கருதி அச்சில் ஏற்றத் தொடங்கினார்கள், அவர்களோ குற்றம் குறையுள்ள அறிவினர், முதல் ஐந்து திருமுறையின் திருஅருள் மரபுயாதும் அறியாதவர்கள், அதனால் திருமுறை மாற்றி அச்சேற்றினார்கள். இருப்பதையும் இல்லாததையும் அச்சேற்றினார்கள்,

ஐந்து திருமுறைகளில் ஆங்குள்ளவற்றையும் ஈங்குள்ள சிலவற்றையும் அச்சேற்றினார்கள், சமரச சன்மார்க்க சங்கத்துச்சாதுக்கள் உள்ளம் பேதலிக்கும்படி அச்சிட்டார்கள், அதனை உணர்ந்து வருந்தி உரைத்தார் தீதிலாதவரும், திருஅருட்பேற்றிற்குஉரியவரும், திருஅருட்பாவை பாதுகாத்து வைத்திருந்தவரும் ஆகிய சிவானந்த புரம் செல்வராயர் என்பவர்.   










(இறுக்கம் இரத்தனம்)

மறுக்கத்தான் அமரர்எலாம் நொந்தழுலும் வந்தழலும்
பொறுக்கத்தான் அருநஞ்சம் அமுதுண்டு பொன்மிடறுங்
கறுக்கத்தான் உளம்வைத்த கண்ணாளன் கழற்கன்பான்
இறுக்கத்தான் கற்றவன்ஓர் இரத்தினம்எனப் பானோடு.   (49)

உரை:

பிறர் திருஅருட்பாவை தவறாக அச்சிட்டதைக் கண்ட சமரசவேத சன்மார்க்க சங்கத்து அன்பர்கள் எல்லாம் அவ்வாறுஅச்சிட்டதைக் மறுப்பு கூறி, மனம் நொந்து அழுதிட்டார்கள்.   பலரும் வந்து வந்து சொல்லி கண்ணீர் சிந்தினார்கள், உலகஉயிர்களை எல்லாம் ஈடுஏற்றம் செய்ய வேண்டும் என்று கருதி கடல் நஞ்சினையே அமுதமாக உண்டவர் நம் கண்ணுதலாம்சிவபெருமான், அச்சிவபெருமானின் சிவநெறியின் பால் நீங்காத நேயமும், சிவபெருமானின் திருவடியின் பால் நீங்காத அன்பும்உடையவர் ஒருவர் அவரே இறுக்கம் என்னும் ஊரை உடையவர், இரத்தினம் என்னும் பெயரை உடையவர்.   













(கூட்டுறவின் உறுதிப்பாடு)
கலி நிலைத்துறை

வில்லா ருஞ்சிறு பிள்ளை மதிப்பிஞ் சணிவேணிப்
பொல்லார் மன்றா டியசே வடிசேர் புலமிக்கான்
நல்லார் நம்பெரு மக்கட் கினியா னவையில்லான்
மல்லார் திந்தோள் நம்பி அவன்துணை வலியாலே.   (50)

உரை:

இமயமலையை வில்லாக வளைத்தவனும், சின்னஞ்சிறிய இளம்பிறையைத் திருமுடியில் தரித்தவனும், புன்மைகள் நீங்கியபொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் இடுபவனும் தில்லை கூத்தன் ஆவான், அத்தில்லை கூத்தனின் திருஞானம் மிகுந்தவனும், சமரச வேத சன்மார்க்க சங்கத்தார்க்கு இனிமையானவனும், குற்றம், குறை இல்லாவனும், உறுதி பூண்ட திரண்டத் தோள்களைஉடையவனும், ஆடவருள் சிறந்த அண்ணலாகிய அந்த இரத்தினம் என்பானது கூட்டுறவு சன்மார்க்க சங்கத்தவருக்குஉறுதியாகக் கிடைத்தது.   




No comments:

Post a Comment