Search This Blog

Wednesday, December 25, 2013

"திருஅருட்பா வரலாறு - 6" - வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார்

தயவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
"திருஅருட்பா வரலாறு" -
சன்மார்க்க சங்கச் சாதுக்களின் வேண்டுகோளின் படி
வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு
"திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின்ஒப்புதலின் படி
திருஅருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "
 
உரை : வடலூர் . புலவர். சீனி. சட்டையப்பனார்
 
வெளியீடு :
வள்ளலார் இளைஞர் மன்றம் - கோட்டக்கரை - வடலூர்
வள்ளலார் குடில் - விருத்தாசலம். 
வள்ளலார் பெருவெளி இணையதளக் குழுவினர் - நியூ ஜெர்சி - அமெரிக்கா
 ======
 
 
(தடுக்க எழுந்தனர்)
தரவு கொச்சகக் கலிப்பா

சிவநேசச் சிவராஜ யோகியர்க்காம் திருச்சிறந்த
தவநேசன் வாசுதேவப் பெயர்கொள் தகுதியனே
பவநேச மற்றார்கள் பற்றுபசு பதிக்கினிய
நவநேசன் ஐயாசாமிப் பெயரோ னேஇருவர்.   (51)

உரை:

சிவநேயமும், சிவயோகமும் சிறந்த திருவாளராகிய சிவராஜ யோகத்தில் தலைநின்ற பெரியவர் வாசுதேவன் என்னும் பெயர் கொண்ட தகுதியாளர், உயிர் நேயமுடைய அவரும், மற்றும் நவ நிலைகளில் அனுபவமிக்க ஐயாசாமி என்பவரும், வள்ளலின்சம்மதமின்றித் திருஅருட்பா அச்சேற்றுத்தைக் கண்டு கலங்கினார்கள்















(வள்ளலின் திருச்சமூகத்திற்கு விண்ணப்பம்)

தங்களைமுன் னிட்டவரைத் தடுத்ததன்றி அறம்நேக்கி
அங்குசிலர் பொருள்ஈந்தும் அவர்தனியே கரந்துமீட்
டுங்கச்சில் இட்டுவெளி யாக்குறக்கண் டுள்ளுடைந்து
மங்கலஞ்செய் நாயகர்க்கு வழிமொழிவிண் ணப்பித்து.   (52)

உரை:

மேலே கூறிய வாசுதேவன், ஐயாசாமி என்னும் இவர்களை முன் அனுப்பித் திருஅருட்பாவை மரபுமாறி, முறைமாறி, அச்சிடவேண்டாம் என்று அச்சேற்றியவர்களுக்குச் சன்மார்க்க சங்கத்தார்கள் அறிவுறுத்தினார்கள், அத்துடன், பிறகு யாவரும்அச்சேற்றிடாதபடி கண்காணித்து வந்தார்கள், இந்நிலையில் சிலர் மூலப்பிரதி உள்ளவர்களுக்கும் அச்சிட்டவர்களுக்கும் பணம்தந்து முன் போல மரபு மாறி, முறை மாறி அச்சிடத்தொடங்கினார்கள், அவ்வாறு திருஅருட்பா திருமுறைகள் முறைமாறிஅச்சில் வருவது கண்டு மீண்டும் உள்ளம் உடைந்தார்கள் சன்மார்க்க சங்கத்து அன்பர்கள், முடிவாகத் திருவருள் மங்கல நாண்சூட்டி அடியார்களைக் காப்பற்றும் நாயகனாம் வள்ளற் பெருமானிக்கு இயல்பாகவும் முறையாகவும் எடுத்துக்கூறிமுறையிட்டுக் கொண்டார்கள்.   











(அன்பர் இரத்தினம் முயற்சி)

முறையுளித்தாம் அச்சியற்ற இரத்தினப்பேர் முதுக்குறைவன்
இறைஅருளுக் கேற்றிரப்ப எந்தைஅருள் இசைவின்றிக்
குறைஇரந்தார் குறைக்கிரங்குங் கொள்கைகண்ட வக்குணவான்
மிறைஉள்ளார் மிகைஅறுக்க மேற்கொண்டங் குசாவுதலும்.   (53)

உரை:

சன்மார்க்க மரபில் முறையாக விளங்கி ஓங்கும் அன்பர் இரத்தினம், அப்பேரறிஞர், திருஅருட்பா பாடல்கள் முறைப்படிஅச்சேற்ற எல்லாம் வல்ல வள்ளற் பெருமானாரின் அருளை வேண்டி நின்றார்கள், அப்படியும் எமது தந்தையாராகியதிருஅருட்பிரகாச பெருமானார் சிறிதும் இசைவு அளிக்கவில்லை, கடவுள் திருஅருளால் கிடைக்கப் பெற்ற பணம் முதலியபொருட் கருவிகளை எவ்வகை ஆதரவும் இல்லத ஏழையரின் பசி நீக்குதலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதனால் அப்படிஇசைவு தராமல் இருந்தருளினார்கள்.   

ஆனாலும் குறைகளைச் சொல்கின்றவர்களின் குறைகளைப் போக்கும் கொள்கையும் குணமும் உடையவர்கள் வள்ளற்பெருமான், அத்தகைய நம் பெருமான் முறையற்றவர்களின் முறையற்ற அச்சேற்றத்தைச் தடுக்க அப்போது ஓரளவு கருணைகூர்ந்தார்கள்.   











(வைப்பு நிதி)

பல்லவகோ திரத்துவந்த சபாபதிமால் பயந்தருளும்
நல்லவன்எம் உயிர்த்துணையான் நாயனார் கழல்மறவாச்
செல்வமிகு காரணத்தா னுஞ்செல்வ ராயன் என
வல்லபடி முன்நுவன்ற வண்மைப்பேர்ச் சேமநிதி.   (54)

உரை:
பல்லவ கோத்திரத்தில் வந்தவர் சபாபதி என்னும் பெரியவர், அவர் ஈன்றருளிய நல்லவரும், எம் உயிர் துணையாகவிளங்குபவரும் வள்ளல் பெருமானின் திருவடிகளை மறவாது அருட்செல்வம் மிகுத்துக் கொள்ளும் நன்முயற்சிஉடையவருமே சிவானந்தபுரம் செல்வராயர்.   அவர் முன்பு சொல்லியபடி வள்ளண்மை பூண்ட உள்ளத்தினராய்த் திருவருட்பாப்பாடல்களைத் தொகுத்து வைக்கும் வைப்பு நிதியாக விளங்கத் தொடங்கினார்.   















(தொழுவூர் வேலாயுத முதலியார்)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தன்அடைந்தார் தானாகத் தாங்குபெருந் தயாளன் சற்குணங்கள் எல்லாம்
பொன்னுருஒன் றெடுத்ததெனும் புகழாளி உயிரும்ஒரு பொருள்அன் றாக
என்னவர்க்கும் ஈகைபயிற் றெடுத்தல்உணர் வினுக்குறையுள் யார்க்குந் தந்த
முன்னம்உணர்ந் துபகரிக்கு முதலியப்பா அண்ணல்அருண் முளைநன் மீளி.   (55)

உரை:

தன்னிடம் சேர்ந்தவர்களைத் தானாகவே கருதி தாங்குகின்ற பெரும் தயவுள்ளவர்.   சற்குணங்கள் யாவும் திரண்டு ஒருபொன்வடிவம் எடுத்தது போல் விளங்குபவர், அருட்புகழுக்கு உரியவர், உயிரையும் ஒரு பொருளாகக் கருதாதவர், எத்தகையவர்களுக்கும் ஈதல், இசைபட வாழ்தல் என்னும் கோட்பாட்டினைப் பயிற்றுபவர், ஆடவருள் சிறந்தவர், ஜீவகாருண்யநல் உணர்விற்கு இருப்பிடமானவர், எத்தகையவர்க்கும் அவர்தம் நோக்கம் உணர்ந்து உபசரிக்கும் தன்மையாளர்முதலியாரப்பா என்பவர், அவரே திருஅருட்பிரகாச அண்ணலாருக்கு அருள் மரபின்படி முளைத்து எழுந்த முதல் சீடர் ஆவார்.   











(புதுவை வேலு)

தரவு கொச்சகக் கலிப்பா

விற்புருவம் நெறித்தருளி வீறடங்கப் புரம்பொடித்த
பொற்புருவச் சிலையாளி புண்ணியநீற் றன்புடையான்
அற்புருவன் அருட்பிரகா சப்பெருமான் திருவருட்குச்
சொற்புதுவை வேலையன் றனைத்துணையாத் துணைகொண்டு.   (56)

உரை:

வில் போன்று புருவங்களை நெரித்து, திரிபுராந்தகர்களின் மும்மலச் செருக்கு அடங்கத் திரிபுரங்களைப் பொடியாக்கி, பொன்மலையையே வில்லாக்கிய சிவபெருமானின் புண்ணியமாகும் நெறியோ திருநீற்று நெறி, அத்திருநீற்று நெறிக்குஅன்புடையவர் புதுவை வேலு முதலியார் என்பவர், அன்புருவமான திருஅருட்பிரகாசப் பெருமானின் திருவருளைதுணையாகக் கொண்டும் புகழ்மிகும் புதுச்சேரி அவ்வேலையரின் உதவியைத் துணையாகக் கொண்டும் திருஅருட்பா அச்சிடும்பணி தொடங்கலாயின.   












(திருஅருட்பா முதல் பதிப்பு)

வேண்டுவன உபகரிக்கக் கலிநாற்பத் தொன்பதுநூற் றறுபான் மேலெட்
டாண்டெழுதா வெழுத்தேற்றி நான்குமுறை அரசறிய வெளியிட் டியார்க்கும்
பூண்டெழுபேர் இன்பமகிழ் வதுபெருகப் பணிபுரியும் பெற்றி யானே
காண்தகுசீர்த் தேவநா யகன் அருளும் இரத்தினப்போர்க் காத்திட்டானே.   (57)

உரை:

திருஅருட்பா அச்சிடும் பணிக்கு வேண்டியவற்றைப் புதுவை வேலு என்பவர் உபகரிக்கத் தொடங்கினார், அதன் காரணமாகக்கலியுகாதி ஆண்டு 4968ல் அச்சிட்டு திருஅருட்பா நான்கு திருமுறைகள் அரசாங்கத்தினர் அறியுமாறு வெளியிடப் பெற்றது.  அதனைக் கண்ட யாவர்க்கும் பேரின்பமாம் மகிழ்ச்சியது பொங்கிப் பெருகியது, சன்மார்க்கப் பணியையே தன் மூச்சாகக் கொண்டதன்மையால் இறுக்கம்.  இரத்தினம் என்னும் பெரும் பெயரை திருஅருட்பா வெளியீட்டினால் காத்துக்கொள்ளும் நற் காரியத்தைஅவர் செய்திட்டார்.   














(திருஅருட்பா எனும் தரு தழைக்கத் தொடங்கியது)

மிக்கமறை ஏத்துமுக்கண் வித்தகனார் திருமயிலைத்
தொக்கஇளங் கோக்குடியில் வருந்தூயன் குணநிதியான்
சிக்கிட்டி அருள்சோம சுந்தரன்செய் தாளாண்மை
தக்குலகு திருஅருட்பா இனிதுபெறத் தழைத்தன்றே.   (58)

உரை:

சுத்த வேதங்களால் போற்றப் பெறுபவரும் மூன்று கண்களையும் அருள் ஆற்றலும் உடையவருமே சிவபெருமான், அவரதுதிருக்கோயில் ஓங்கி விளங்கும் தலம் திருமயிலாப்பூர்.   அம்மயிலாபூரில் குடிச்சிறப்பாலும், குணச்சிறப்பாலும், கொள்கைச்சிறப்பாலும், செல்வச் சிறப்பாலும் சிறந்து விளங்கியவர் சிக்கிட்டி செட்டியார் என்பவர்.   அவர் கருணை கூர்ந்து ஈன்றருளியவரேசோமசுந்தரம் என்பவர், அவரே திருஅருட்பா பதிப்பிற்கான பெரும் பொருள் உதவி செய்யலானார்.   அதன் காரணமாகப்பூவுலகினிடையில் திருஅருட்பா என்னும் கற்பகத் தரு பேரின்பக் கனிகளைத் தர என்றே வளர்ந்து செழித்துத் தழைக்கத்தொடங்கியது.   













(சீனிவாச வரதர்)

நேசம் எல்லாம் உடையார்க்காய் உள்ளம் உருகி நிறைஅழிந்த
தேசன்எங்கள் சடகோபன் தெய்வத்தமிழோர் வடிவாகிப்
பாசங்கழன்று வடகலைப்பாற் கடற்கோர் பஃறியாம்சீனி
வாசவரதப் பெயர்கொள்அறங் கரையும்நாவின் மறைக்கொழுந்து.   (59)

உரை:

பக்திப் பெருக்கு உடையவர்களோடு கூடி உள்ளம் உருகுபவர் குறை அழிகின்றவர், நன்மை எல்லாம் உடைய நம் ஆழ்வாரின்திருவாய்மொழியாம் தெய்வத் தமிழே ஓர் உருவானவர், பந்த பாசங்களில் இருந்து விளகியவர், வடகலை என்னும் வைணவப்பாற்கடலுக்கு ஒரு தொப்பமாய் விளங்குபவர் கொந்தமூர் சீனிவாச வரதர் என்னும் எழிற்பெயர் பூண்டவர், அவர் அறங்களைஎடுத்துக்கூறும் செவ்விய நாவினை உடையவர், வேதத் தளிராகி விளங்குபவர், அவரும் வள்ளலின் மாணாக்கராய் விளங்கித்திருஅருட்பா வெளியீட்டுப்பணியில் பங்கு பெற்றார்.   














(வீராசாமி என்னும் தவக்கொழுந்து)

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேதனார் மாலார் காணரும் முக்கண் விகிர்தனார் விளம்பரு ஞான
போதனார் அளவாப் புனிதனார் நாயேன் புழுத்தலைக் கினிதிரு தியசெம்
பாதனார் அன்பர் உளம்பிரி யாத பரமனார் அருட்பிர காச
நாதனார் கருணைக் குறையுளார் வீரா சாமிப்பேர் நற்றவக் கொழுந்து.   (60)

உரை:

நான் முகனும் திருமாலும் காணமுடியாத முக்கண்களை உடைய சிவபெருமானார்; எடுத்துச் சொல்ல முடியாத மெய்ஞ்ஞானமே ஒரு திருவடிவானவர்; அளவிட முடியாத புனித புண்ணியர், நாயேனுடைய புழுத்தலையின் மீது செவ்விய திருவடிகளை இனிது சூட்டியவர்; அன்பர்களின் உள்ளத்தின்று ஒரு நொடியும் பிரியாத அருட்ஜோதி தெய்வமானவர்; அவரே அருட்பிரகாசநாயகனார், அவரது திருவருளுக்கு உறைவிடமானவர், வீராசாமி என்னும் நற்பெயருக்கு உரியவர், அவரும் வள்ளலின்மாணவராகி நல்ல தவக்கொழுந்தாய் விளங்கி அச்சுப்பணியில் ஈடுபட்டார்.   











(தேவநாதரும் அப்பாசாமியாரும்)

தவம்அர சிருக்கும் அத்தாணி நெஞ்சர் தகும்உயிர் கின்புசெய் தக்க
சிவம்உணர் பெரியர் அருட்பிரகாச தேசனார் திருவடிக் கன்பர்
அவம்அறு தேவ நாயகன் அப்பா சாமியே ஆதிஆ ரியர்கள்
நவம்உறு சென்னைக் கூடன்மற் றுள்ள நற்றலந் தொறுநங்கள் நாதன்.   (61)

உரை:

தனக்கு நேரிட்ட துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுபவர், எந்த ஓர் உயிருக்கும் எள்ளளவும் துன்பம் செய்யாதவர், அத்தகையநல் தவசிங்காசனத்து அரசு வீற்றிருக்கும் உள்ளத்தை உடையவர், பொருந்துகின்ற உயிர்தொகுதிக்கு இன்பமே செய்யத்தகுந்தவர், சிவபரம் பொருளை உணர்ந்து அவராகிய பெரியவர்தான் திருஅருட்பிரகாசர் என்னும் அருட்புகழை உடைய வள்ளற்பெருமானார், அவர்தம் திருவடிகளுக்கு மாறாத அன்புடையவர்களாகி அவலக் கவலைகளை நீக்கியவர்கள் தேவநாயகர், அப்பாசாமியார் முதலிய உயிர்நேய உணர்வாளர்கள்.   மேலும் அவர்கள் அருட்புதுமை பெறத்தக்க சென்னப்பட்டிணம், மதுரையம்பதி மற்றும் உள்ள நல்லிடங்கள் தோறும் வாழ்கின்றவர்கள் ஆவார்கள், அவர்களும் அச்சிடும் பணிக்கு ஆதரவு
நல்கினார்கள்.   











(திருஅருட்பா வரலாறு)

பொன்பழித் தலர்செந் தாமரை குழைத்த பூங்கழற் கன்பராய் உள்ளார்
தன்பொரூஉஞ் சீர்த்தச் சமரச வேத சன்மார்க்கத் தனிப்பெருஞ்சங்கத்
தென்பவம் அறுக்கும் எம்பெரு மக்கள்இன் செவிக்களம் புகுந் தெளியேன்
துன்பறச் சென்னி அரசிருந் தன்றித் தூயநல் லருள்வர லாறே.   (62)

உரை:

மாற்று உயர்ந்தப் பொன்னை ஒழித்ததும் மலர்ந்த செந்தாமரையின் வளன் பொருந்தியதுமான வள்ளலின் திருவடிகளுக்குஅன்பர்களாய் பலர் உள்ளனர், அத்தகைய அன்பர்களின் பெரும் புகழுக்கு ஈடும் இல்லை; இணையும் இல்லை, அன்னவர்யாவரும் ஒன்று கூடியதே சமரச வேத சன்மார்க்கத் தனிப்பெரும் சங்கம், என்னுடைய பிறவிப் பிணியை அறுக்கக் கூடியஅத்தகைய சன்மார்க்க சங்கத்துப் பெரியோர்களின் செவி என்னும் களத்தில் புகுந்து ஒளிர்வதுதான் இத்திருஅருட்பா வரலாறு.   














(திருவருளால் வகுக்கப்பெற்ற திருமுறைகள்)
தரவு கொச்சகக் கலிப்பா

நடந்தசெயல் அருள்காட்ட நான்வகுத்த படியன்றி
மடம்படும்என் அறிவானே வகுத்ததன்றாம் ஆதலினால்
இடம்படுதம் உணர்உணர்வின் எம்பெருமக் கள்சவையும்
உடம்படும்புன் மொழிஎள்ளா துலகமெலா மோங்குகவே.   (63)

உரை:

திருஅருட்பா பாடல்கள தொகுக்கப் பெற்றதும், ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றதும், அத்திருஅருட்பா பாடல்கள் நான்குதிருமுறைகளாக அச்சேற்றியதும், வேலாயுதனாகிய என்னால் செய்யப் பெற்றவை அல்ல.   மேற்கூறிய செயல்கள் யாவும்திருவருள் முன்நின்று வழிகாட்ட வகுக்கப் பெற்றவையே ஆகும், அறியாமையால் அழுந்தும் எமது புல்அறிவால் இவைவகுக்கப் பெற்றன அல்ல, ஆதலினால் சன்மார்க்க சங்கத்தில் இடம் பெற்று மனித நேய உணர்விலும் உயிர் நேய உணர்விலும்ஓங்கி வளரும் எமது பெருமக்களாம் சன்மார்க்க சங்கத்தவர்கள் யாவரும் வள்ளலின் ஆணைக்கு உட்பட்டு பாடியஇத்திருஅருட்பா வரலாற்றினை இகழாது ஏற்பார்களாக! இத்திருஅருட்பா வரலாறு உலகம் எங்கும் ஒளிர்ந்து ஓங்குவதாகுக!

அருட்பெருஞ்ஜோதி

முற்றிற்று.   


No comments:

Post a Comment